Print

மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப் பட்டறை – 2023

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடத்திய மாணவர்களுக்கான ஆன்மீக தலைமைத்துவம் தொடர்பான பயிற்சிப்பட்டறை 2023.01.24 செவ்வாய்க்கிழமை காலை 8.30மணி  தொடக்கம் பி.ப 3.30மணி வரை நாவலர் கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தலைமையில் நடத்தப்பட்டது.

இப்பயிற்சிப்பட்டறையானது இறை வணக்கத்தைத் தொடர்ந்து திருமதி.மாணிக்கசர்மா ஆனந்தலக்சுமி அவர்களின் வரவேற்புரையுடன் இனிதே ஆரம்பமாகியது. அதனைத் தொடர்ந்து யாழ்  பல்கலைக்கழக இந்துக்கற்கைகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்  திரு.சி.ரமணராஜா அவர்களினால் யோகாசனப் பயிற்சி அறிமுகமும், அதன் முக்கியத்துவமும் பற்றி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. அதன்பின் “ஆன்மீகமும் தலைமைத்துவமும்” என்ற தலைப்பில் ரிஷிதொண்டன் சுவாமிகளால் மாணவர்களுக்கான அரிய பல கருத்துக்கள் எடுத்துக்கூறப்பட்டது. தொடர்ந்து இந்து மாணவர் சேவாலயத்தின் அமைப்பாளர் திரு.அ.விக்னேஸ்வரன் அவர்களால் திருமுறையும் நாம சங்கீர்த்தனமும் எனும் தலைப்பில் திருமுறைகள் பண்ணுடன் எவ்வாறு பாடுவது என்பது தொடர்பாக மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.

மதிய உணவு இடைவேளையின் பின்னர் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் குருகுலத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் திரு.கு.சுதாகரன் அவர்களால் மாணவர்களுக்கான விளையாட்டாளுமைப் பயிற்சி தொடர்பாக மாணவர்களை மகிழ்வூட்டும் விதமாக செய்முறை விளக்கத்துடன் விளையாட்டுக்கள் மூலம் சமத்துவம் தொடர்பாக சிறப்பாக போதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து “ஆன்மீகமும் வாழ்வியலும்” எனும் தலைப்பில் பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் அவர்களினால் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்துரை ஒன்றும் ஆற்றப்பட்டது. இறுதியாக யாழ்ப்பாண மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.வி.சுகுணாளினி அவர்களின் நன்றியுரையுடன் பிற்பகல் 3.30மணியளவில் இப்பயிற்சிப்பட்டறையானது இனிதே நிறைவுபெற்றது. 

 

Hits: 1430